21.11.11

காகிதக்கப்பல்






மழை விட்டதறிந்து
சன்னல்களூடே சந்தித்துக்கொள்கிற
எதிரெதிர் வீட்டுச்சுட்டிப்பயல்களின்
கண்களில் நிலைத்துவிட்டது
மின்னலின் ஒளி

ஆர்ப்பரித்துத்தெருவுக்கு வரும்
அவர்தம் கைகளில் தவழ்கின்றன
நூற்றுக்கணக்கில் கப்பல்களை
தம்முள் பதுக்கி வைத்திருக்கும்
எழுதித்தீர்ந்த நோட்டுப்புத்தகங்கள்

பிஞ்சு விரல்களால் தாள்கள்
கிழிபடுவதிலிருந்து துவங்குகிறது
காகிதம் தவிர
உதிரி பாகங்கள் எவையுமின்றி
கப்பல்கள் கட்டும் பணி

ஆயிற்று..
மழை நீரின் ஓட்டத்தில்
மெல்ல உந்தப்பட்டு நகர்கிறது
மாலுமியொருவன் செலுத்துவதன்
நிர்பந்தங்களேதுமற்ற கப்பல்களில்
முதல் கப்பல்

மேலும் நகர்கிறது,

சிறுவர்களின் பார்வையிலிருந்து
மறையும்வரை பயணப்பட்டு
ஈரலித்தலினிமித்தம்
அவிழ்தலில்
மழை நீருடன் தன்னை
காகிதமாகவே
சமரசம் செய்துகொள்வதை நோக்கி.


- நன்றி, சொல்வனம் இணைய (12.11.2011) இதழ்



19.11.11

எஃப் டிவி ஒளிரும் கார்காலம்



மெத்தென்ற இருக்கையில்
ஒய்யாரமாய்க் கிடந்து
பளிங்குக்கல் தரையில்
ஒருக்களித்துப் படுத்து
ஒன்றிற்கு மூன்றுமுறை
கோணங்கள் மாற்றிக் குனிந்து
கிறக்கம் கிளர்த்தும்
எஃப் டிவியின்
முக்கால் நிர்வாண வானத்தின்
மேகங்கள் மீது வெட்டுகின்றன
காமிரா மின்னல்கள்
 
இடியோசையை
இதயத்துடிப்பில் வைத்திருப்பவனிடமிருந்து
எந்த நிமிடமும் பொழியலாம்
கனமழை.

- நன்றி உயிரோசை (உயிர்மை.காம்) 14.11.2011 இதழ்

6.11.11

சஞ்சாரம்



காணவில்லை என்பதற்கும்
கண்டுபிடித்துத்தர
உருகியுருகி கேட்டுக்கொண்டதற்குமிடையில்
வெகு இயல்பாய்
குறுநகைத்தவாறிருக்கிறான்
மார்பளவு நிழற்படத்தில் அவன்


சடை விழத்துவங்கிவிட்ட
தலையோடும்
அதீதமாயொளிரும் கண்களோடும்
பின்னும்
பிறந்த மேனியோடும்
அதே நகரத்தின்
தெருக்களில் திரிந்தாலும்


வேறெவரும் கண்டறியாதபடிக்கு
அவன் சஞ்சரிப்பது
தம்மை கண்டடைந்தவர்களின்
உலகிலாயிருக்கலாம்

-
நன்றி சௌந்தர சுகன்

2.11.11

நிறமில்லாத இரத்தம்

முன்னதாக :

அரிமா...முருகேசன் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு, கோவையிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு மாத இதழ் அகிலம். (தொடர்புக்கு: பேசி: 9842291116 ; தொடர்புடைய படைப்புக்களை அனுப்பி வைக்க, மின்னஞ்சல்
முகவரி: editor@agilam.org)

நீர் நிலைகளை, காடுகள் மற்றும் விளை நிலங்களை பாதுகாத்தல், இயற்கையோடு இணைந்த உணவு, மருத்துவ முறைகளை ஏற்றல் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கென தொடங்கப்பட்டிருக்கும் இந்த இதழ், இதே நோக்கத்தோடே வெளிவந்துகொண்டிருக்கும் ஏனைய இதழ்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாயும் தரமாயுமிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட, வாசக மனத்தில் வினையாற்றக்கூடிய கட்டுரைகள், (பிரச்சார) கவிதைகள் மற்றும் தன்னம்பிக்கை தொடர்கள், பகத்சிங், திப்புசுல்தான் போன்றோரின் வரலாற்றுத் தொடர்கள், இன்னபிற சிறந்த பகுதிகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அகிலம் இதழில் - குறிப்பாக - இக்கவிதை அச்சேறியிருப்பதில் மகிழ்கிறேன்.
 


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..


- 'அகிலம்' - செப்டம்பர் இதழில்