26.12.12



இருள் தளும்பும் குளம்
பொலிவில்லை
பௌர்ணமி நிலவின் முகத்தில்.






நெய்யில் தோயும்
திரிப் புழு
நெளிகிறது சுடரில்.

18.12.12

பறக்கும் முத்தம்






கை விரல்களோடு
இதழ்கள் ஒற்றி
ஈரத்தின் சிறகுகளோரம்
மெல்ல ஊதி
வழியனுப்பி வைக்கிறாய்
எனக்கான
பறக்கும் முத்ததை

பாதி வழியிலேயே
திசைமாறி விரைகிறது,
திடும்மென ஓர்
பட்டாம்பூச்சியாக
ரூபங்கொள்ளும் அது.

17.12.12

கனவு










சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறேன்
இறகுகளாலான
கிரீடம் தரித்தவர்களின்
ஈட்டி முனைகளால்

தப்பித்தலுக்கான வழிகளை
மூடியபடி
தொடர்கிறது
என் கண்களின் கனவு.

16.12.12

மூன்று கவிதைகள்


1)
எத்தனை இணக்கமாயிருக்கிறது
இந்த இருள்
இந்த நிசப்தம்
என்றுதான் எண்ணியிருந்தேன்

மின்தடை விலகும் நொடி
அந்தகாரம் இமை விலக்க
கண் திறந்து கூசுகிறது
குமிழ் விளக்கு

க்றீச் க்றீச் என
அலறித் தொலைக்கிறது
பறந்து
வெளியேறவும் வெளியேறாத
மூன்று றெக்கை பறவை.

2)
கிராமொஃபோனென
விரிந்திருக்கும் செம்பருத்தி

உள்ளிருந்து வெளியேகும்
ஒரு பாடல்
உடன் கொஞ்சம் இசைத்துணுக்குகள்.

3)
விமானம் என
கூவிச் சுட்டுகிறாய்

பரந்த வான்வெளியில்
நீந்திச் செல்லும்
உலோக திமிங்கல
மீனாகத் தெரிகிறது
என் கண்ணில்.

14.12.12

மரமல்லி


1)
மரமல்லி மரம்
நிழல் என்னவோ
வெள்ளை நிறம்!

2)
வாசலில்
மரமல்லிக் கோலம்
இதுதான்
என்
வீட்டை அறியவான
அடையாளம்.

3)
உதிர்ந்திருந்த
மரமல்லிகளில் இரண்டெடுத்து
கையிலேந்தும் கணம்
நானும்
மரமல்லி மரம்.

4)
ஆழமாக சுவாஸிக்கிறேன்
மறுபடி மறுபடி,
விடாமல் பிடித்துவைப்பதெப்படி
மரமல்லியின் வாசத்தை.

10.12.12

பின்தொடர்கிறது



அடர்ந்த கருமையை விலக்கியபடி
வழி நடத்துகிறது
வாகனத்து விளக்கின் வெளிச்சம்

என்னை

பின்தொடர்கிறது இருள்.

4.12.12

நான் ஏன் இதை நினைத்துக் கொள்கிறேன்


i)
அசையாத விழியோடு
நிழலாடும்
கிளையிலிருந்து
நீங்கியும் நெடு நேரமாயிற்று
பட்சி.

ii)
குழந்தைகள் போடும்
கூச்சலுமே
அமைதியிழக்கச் செய்வது
உன்னை

நான் ஏன் இதை
நினைத்துக் கொள்கிறேன்

விறைப்பேற்றிய பறை
துவங்குகிறது வாசலில்.

25.11.12

சேராக்காதலில் சேர வந்தவன்

                                                                                                                                                                                                                    
சேராக்காதலில் சேர வந்தவன் - தொகுப்பு புனைகதைகள் என்றொரு உப தலைப்போடு தரப்பட்டிருக்கும் சிறுகதைத்தொகுப்பு. புனைகதைகளில் நடப்பியல் சார்ந்த புனைகதைகள், நடப்பியல் சாராத புனைகதைகள், அரைப் புனைகதைகள் வகைமைகளில், நடப்பியல் சாராத புனைகதைகளாக நண்பர் ஆத்மார்த்தியால் எழுதப்பட்டிருக்கின்றன இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அனேக்கதைகள்.

நான் ஒரு பொய்க்காரன். எப்போதும் எனக்கு பொய்களின்மீது நாட்டமிருந்தது. பொய்களற்ற வாழ்க்கையை நான் வாழ விரும்புவதே இல்லை. அதீத ஆழங்களிலும் சதா அலைந்துகொண்டே இருந்த பல தனிமைகளை நான் கடந்துயிர்க்க என் பொய்கள் என்னை கைவிடாத தேவன். என் பொய்களுக்கு நானும் எனக்கு அவைகளுமாக மாறாக்காதலும் மறைவுயிர் விஸ்வாசமுமாக கழிந்த பெருங்காலத்தின் ஒழுங்கற்ற மீள்தல் கணங்கள் எனக்குள்ளிருந்து கதைச்சர்ப்பங்களாக விரிந்து கிளம்பின -  என்பதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ஆத்மார்த்தி, பொய்களை சரியாய் கையாள்வதன் மூலம் பொய்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கும் பேணிச்செல்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது.

இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் மொத்தம் பத்தில், கண்களின் நடனம், ஷரீமா, சேராக்காதலில் சேர வந்தவன், துவாரகா முதலானவை முன்பே நான் சிற்றிதழ்களில் வாசித்தறிந்தவை என்றபோதும், கதைகளின் கட்டமைவு, நுட்பங்கள், உத்திகளை அப்போதைய வாசிப்பில் முழுக்கவும் கண்டடையாமல் விட்டதை இந்த மறுவாசிப்பின்போது தெளிகிறேன்.

அவற்றில் முக்கிய அம்சமாக, ஆத்மார்த்தி என்னும் கதாசிரியர் தனது கதாபாத்திரங்களின் பெயர்களை தேர்ந்தெடுப்பதிலிருந்து மற்ற கதாசிரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார் என்பது இவரின் ஒவ்வொரு கதை மாந்தர்களையும் பெயர்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது புலனாகிறது.

உதாரணமாக, ஒற்றை தேவதை கதையில் வரும் முதல்’, ’சேராக்காதலில் சேர வந்தவன்கதையில் வரும் மேகன், யமி. கண்ணாடிப் புத்தகம்கதையில் வரும் யாமா, நன்னிலா, சித்தாந்தன். கடவுள் சிறைகதையில் வரும் கனா. கண்களின் நடனம்கதையில் வரும் அதிதி, விண்மி, ஆகிருதி போன்ற பெயர்களை சுட்ட முடிகிறது.

கண்களின் நடனம் கதையில், அதிதி என்பவளின் தனிமை நினைவுகளின் பிரிண்ட் அவுட் கிடைக்கப்பெறுவது, அழுவதற்கான கண்ணீர்த் துளிகள் இருப்பில் / கணக்கில் இல்லாதபோது தன் தோழி விண்மியிடம் கடனாய் பெறுவது, ஆகிருதி என்பவள் தனது இருநூற்றைம்பதாவது பிறந்த நாளை கொண்டாடுவது இப்படியாக சாத்தியமற்ற சாத்தியங்களை அனாயாசமாக உருவாக்க ஆத்மார்த்தியால் முடிந்திருக்கிறது.

சேராக்காதலில் சேர வந்தவன் கதையில் இவர் கற்பனையாக உருவாக்கும் மழை நகரம், சாரல் கோவில் போன்றவை நம்மை நம் சொந்த நிலத்திலிருந்து துண்டித்து வேற்று கிரகத்தில் உலவும் அனுபவத்திற்கு இட்டுச்செல்கின்றன.

மனசுத் தொலைபேசியை அணைத்து வைத்துவிடாதே என்று மேகன் யஷ்வந்தியிடம் கேட்டுக்கொள்வதாகட்டும், என்னை உனக்கு தெரியாது, ஆனால் உன்னை எனக்கு தெரியும். உன் வருங்காலத்திலிருந்தே உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்என்று யமி யஷ்வந்தியிடம் மொழிவதாகட்டும், புனைவின் அதிகபட்சமாகயிருந்து இவற்றை இன்னமும் இன்னமும் என்று அனுபவித்துவிட்டே வாசிப்பவர் நகர வழிவிடுகின்றன. காற்றுக் கேமரா, காதுகளின் பதிவுச் செதில்கள், அந்தர கட்டிடக்கலை, யஷ்வந்தியின் 38-ம் வகை குரல் முதலானவையும் எண்ணிப்பார்க்கவே பரவசம் கொள்ள வைக்கின்றன.

தொகுப்பின் இரண்டாவது கதையாக வரும் கதை ஷரீமா, மற்ற கதைகளிலிருந்து வேறுபடுவது. சொல்வதெனில் புனைவு இன்றி யதார்த்தத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை. அடைக்காத கடன் பொருட்டு பறிமுதல் செய்யப்பட்ட தன் மோட்டார் சைக்கிளை மீட்க வேண்டி, வேறெங்கும் பணம் கிடைகாத நிலையில், வேறு வழியின்றி தம்பியானவன் திருநங்கையாய்ப்போன தன் சகோதரனை நாடிச்செல்லும் கதை.

இறுதி வரை கதையை காட்சி விவரிப்புக்களாக நகர்த்தி, முடிவில் தொலைபேசி உரையாடலில் என் உடம்பை விட்டு ஓடத்தான் நான் முயற்ச்சி பண்ணினேன். குடும்பம் மொத்தமும் சேர்ந்து அடிச்சு தொரத்திட்டீங்க, இன்னிக்கு என்னை மாதிரியே ஒரு கூட்டத்துக்குள்ளே நிம்மதியா வாழ்ந்துட்டிருக்கேன். உனக்கு என்னை அக்கான்னு கூப்பிட மனசில்லைன்னா கூட நீ என் தம்பிங்குறது மாறாதுடா.. பணத்துக்காகத்தான் வந்தேன்னாலும், அதுக்காகவாச்சும் வந்தியேன்னு இருந்துச்சுடா.. என்று பெருங்கேவலோடு அழத்துவங்கிய சந்திராவை மறுமுனையில் யார் யாரோ சமாதானப்படுத்துவது தெரிந்தது – இப்படி சந்திராவின் குரல் வழி நம்மை உருகவும் குறுகவும் வைத்துவிடுகிறது ஷரீமா என்கிற உன்னதமான கதை.

அடுத்த கதை துவாரகா. செக்ஸ் மேனியாக், கணவனுடன் சில நாள் மட்டும் வாழ்ந்தவள், ஆண்களை அடிமையாக்கி விடுபவள்,  என்றெல்லாம் அனைவராலும் தூற்றப்பட்ட போதும் துவாரகாவோடு நெருங்கிப்பழகும் நாயகன் பற்றிய கதை. கனவில் ஒலிக்கும் குரல் நிமித்தம் துவாரகாவை சந்தேகிக்கவும் அவளோடு அவன் முரண் படவும், துவாரகா அவனைப் பிரிகிறாள். துவாரகா அவனுக்கு பரிசளித்த பொம்மைகளை வைத்துக்கொண்டு அது தொடர்பான நினைவுகளை தன் கனவோடு இணைப்பதன் மூலம் துவாரகாவை கனவுக்குள் கொண்டுவருவதில் மகிழ்ந்திருக்கிறான். கதையின் இறுதியில் பொம்மைகள் உயிர் பெற்று அவனை கொல்ல வருவதோடு நிறைவு பெறுகிறது அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த கதை.

ஊழிக்காலமொன்றில் கொள்ளை நோயும், போரும் பூசலுமாக முடிவுக்கு வந்துவிட்ட உலகில் எஞ்சிய வாத்தியக்காரனொருவன், பெண்ணொருத்தி தான் சாகுந்தருவாயில் அவனிடத்தில் சேர்க்கும் குழல் கருவி, ஒரு மர நாய், ஒரு செந்நிற நாய். இவர்கள்தான் வாத்தியக்காரன் கதை பாத்திரங்கள். கதையில் வரும் வாத்தியக்காரனும், மர நாயும் போர் ஓய்ந்த நிலத்தை கடந்து வருகையில் மர நாய் செந்நிற நாயை கண்டுகொண்டு கூடித்திரும்புகிறது. பயணத்தின் விளிம்பில் வாத்தியக்காரனும் தனக்கான இணையை கண்டடைவதை ஊழியை முடிவுக்கு கொண்டுவருவதன் குறியீடாக்கி கதையை முடிக்கிறார்.

கதாசிரியரை கண்டுகொள்வதற்கான தடயம் போல இத்தொகுப்பின் அனேக கதைகளில் மழை இடம் பிடித்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆத்மார்த்தி, கவிஞனாகவும் தானிருப்பதற்கு சாட்சியமாக கருப்பு வெள்ளை நகரம்கதையில் மழை ஓய்ந்த பின்னான காட்சியை – தரையில் ஆங்காங்கே தேங்கி நின்ற நீர், வரையத்தெரியாத குழந்தைகள் இட்ட ஒழுங்கற்ற வட்டங்களாய் வீதியெங்கும் இறைந்து கிடந்தனஎன்று அழகாக எழுதிச்செல்கிறார்.

கருப்பு வெள்ளை நகரம் கதையில், மனித மனங்களை பழுது பார்க்கும் கடை, குழந்தைகளுக்கு வண்ணம் மாற்றும் கடை, தர்ஷவர்ஷிணி கதவை திறக்கும் முகமாக சிறிய சதுரத்திரையில் தன் உள்நாக்கை நீட்டித் தொடுதல். ஒற்றை தேவதையில் 3098-ம் ஆண்டின் உலகம், அன்பும் காதலும் அரும்வார்த்தையகத்தில் வைத்து பேணப்படல். இரண்டு கனவு மூன்று காதல் கதையில் சர்வசகியும் செந்திலகனும் வயலட் நகரத்திலிருந்து செம்பழுப்பு நகரத்துக்கு இடம் பெயர்தல் முதலான புனைவுகளை தர்க்க ரீதியாக கதைகளோடு ஒன்றிப்போகச்செய்திருப்பது ஆசிரியரின் வெற்றியென்றே ஆகிறது.

கோவில்களில் கட்டணம் வசூலித்து சிறப்பு தரிசனத்துக்கு வழிவிடும் இன்றைய முறையை, கொஞ்சம் ஹைடெக் சமாச்சாரங்களை கலந்து, ஹைடெக் கோவிலின் 5-ம் மாடியில், சரக்கு அறையில் கிடத்தப்பட்டிருக்கும் மிகப்பழமை வாய்ந்த கடவுள் சிலையை, நாயகன் லஞ்சம் கொடுத்தே பார்த்துவிட்டு திரும்புகிறான் என்பதாக முடிக்கப்படும் கடவுள் சிறை கதையை நான் அவதானித்த வரையில் தொகுப்பின் மற்ற கதைகளின் தீவிரத் தன்மையிலிருந்து விலகி நிற்பதாகவே படுகிறது.

மற்றபடி ஆத்மார்த்தி என்கிற கதாசிரியர் தனக்கான ஒரு படைப்பு மொழியை, கதை சொல்லலில் மாறுபட்ட பாணியொன்றை கைக்கொண்டிருக்கிறார் என்பதை வாசிப்பனுபவமாக பெறமுடிகிறது.

OOOOOOOO

சேராக்காதலில் சேர வந்தவன்  (புனைகதைகள்)
ஆத்மார்த்தி

ஆழி பப்ளிஷர்ஸ் வெளியீடு.

23.11.12

வளைவுகள்


இடது பக்க சுட்டு விளக்கை
அணைக்க மறந்தவனுக்கு
அடுத்தடுத்து வாய்ப்பதென்னவோ
வலது பக்க வளைவுகள்!

7.11.12

நாமும் நவீன யுகமும்




அன்பு நண்ப..! - என்று
நட்பு நாடவும்
பயனர் பெயரோடு
கடவுச்சொல்லும்
அனுமதிக்கும் காலம்

கள்ளச்சாவிகளும்தான்
என்ன செய்யும் -
மனனத்திலிருக்கும்
ரகசியக்குறியீட்டு
எண் போதும்

கை ரேகையை இனங்கண்டு
கதவு திறந்து வழி விடும் -
வேறென்னதான் வேண்டும்
கண்காணிப்பு

குரலின் தன்மையறிந்து
ஏற்றுக்கொண்டால் அதுதான்
ஆகச்சிறந்த பாதுகாப்பு

ரோபோக்களை
மனிதன் வடித்தல் போய்
மனிதனே ரோபோவாகி வருவதல்லவா
முரண் நகை

சகலமும் வரவு
சாட்டிலைட்டில்
என்பது போய்
ரகசியக்காமிராக்களில் நம்
அந்தரங்கங்களின் கதை

பொத்தானில் இயங்கும் உலகம்
இதற்கு
பசியும் தாகமும் ஒரு பொருட்டா

சக்தியேற்றிக்கொண்டால்
சரியாய் போகும்
என்றே நினைக்கும்
கொஞ்சம் பகட்டாய்

காற்றின் அறைதலையொத்து
சற்றேனும் பிசகினாலும்
சரிந்துபடும் சீட்டுக்கட்டு கோபுரம்
நவீன யுகம்

இயற்கையின் காருண்யம் ஒதுக்கி
செயற்கையின் பின்
ஓடுகிறோமே
நிஜத்தில் இதுதான் நரகம்!


(04.11.12 அன்று கோவையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பில், நண்பர் இளஞ்சேரல் தலைமையில் நிகழ்ந்த கவியரங்கத்தில் வாசிக்கப்பட்டது)


6.11.12

பிறகென்ன


சாம்பல் விலக
கட்புலனாகும்
செக்கச்செவேலென
ஓர் கங்கு

பிறகென்ன,

காற்றை ஏவி
ஊதியூதி
தீப்பிடிக்கச் செய்வேன்
கிழக்கை.


29.10.12

முகத்தில் பட நடனமாடிய தேநீர் ஆவிக்கு நடுவில்


’வெயில்நதி’ சிற்றிதழ் அறிமுக மற்றும் ஆத்மார்த்தியின் சிறுகதைத்தொகுப்பானசேராக்காதலில் சேர வந்தவன்பற்றிய விமர்சன அரங்குக்கென நேற்று (28.10.2012) காலை புறப்பட்டுச் சென்று சங்கம் வளர்த்த மதுரையை அடைகையில் பிற்பகல் 2.00 மணி. இயற்கை சிவமும் அதே நேரம் மதுரையை அடைந்துவிட்டார் என்பதை போன் மூலம் அறிந்து கொண்டபோதும், இருவருமே ஒரே பேருந்து நிலையத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு பேசிக்கொண்டோம் பாருங்கள்,

எங்கே நிக்கறீங்க சிவம், தியாகு’-வில் தொடங்கி, பஸ் ஸ்டாண்டுக்கும் எதிர்த்தாற்போல், வசந்தம் ஹோட்டல், போலிஸ் ஸ்டேஷன், ஆட்டோ ஸ்டேண்டு, டௌன் பஸ் நிறுத்தம் என்று ஆளாளுக்கு கண்ணில் பட்ட இடங்களை சொல்லி, அடுத்தடுத்து நகர்ந்து, அடைந்து, நின்று எதிர்ப்படும் முகங்களில் நான் சிவத்தை, அங்கே சிவம் தியாகுவை தேடித்தேடி, கடைசியில் நான், ’ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்று ஆர்ச் இருக்கும் சிவம், இங்கேயே நிற்கிறேன் வாங்க’ - என்ற போதுதான் சிவம் விழித்துக்கொண்டார் போல, ’தோழர், நான் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இல்ல இருக்கறேன்என்று சொன்னபோது கொஞ்சம் நீரை முகத்தில் தெளித்துக்கொள்ளலாம் போல மயக்கம் மயக்கமாய் வந்தது.

அப்புறம், பஸ் பிடித்து சிவம் ஆரப்பாளையம் வரும் வரை காத்திருந்து, அவர் வந்ததும் ஆட்டோவில் ஏறி வரச்சொல்லி, பை பாஸ் ரோடு, (ரிலையன்ஸ் ஆபீஸ் பக்கத்தில் குணா பட பாணியில் கேட்பதெனில், இதையும் எழுதணுமா...?!) அழகப்பர் ஹோட்டலில் ஆத்மார்த்தியின் அற்புதமான விருந்தோம்பல். முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு வெளியேயே முக்கால் மணி நேரம் வரை அளவளாவல்.

5.00
மணிக்கு கூட்டம் எனில் அதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று நானும், இயற்கை சிவமும் கிளம்பி கோவிலை அடைந்ததும், பைக்குள் தூங்கிக்கொண்டிருந்த இயற்கை சிவத்தின் காமிரா சோம்பல் முறித்து, எல்லா தூண்களின் சிற்பங்கள் முகத்திலும் தனித்தனியே கண் விழிப்பது என்று பிடிவாதம் காட்டியதன் அழகு, அதை தனியாய் எழுதலாம். பின்னும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிய சிறப்பு அனுமதி வழியில் மீனாட்சி அம்மனைத்தான் தரிசிக்க போகிறோம் என்று முன்னேறினால், பின்னர்தான் தெரிந்தது, வந்தது சிவன் சன்னிதிக்கு என்று. மீனாட்சியம்மனை தரிசிக்க இயலாது என்று தெரிந்த போது மணி 5.10.

அரை மனதாக வெளியேறி ஆட்டோ பிடித்து மூட்டா ஹாலைதொட்டதும், முகத்தில் பட நடனமாடிய தேநீர் ஆவிக்கு நடுவில், இவர்தான் ஸ்டாலின் ராஜாங்கம், இவர் எஸ்.செந்தில் குமார், இவர் பி.ஜி.சரவணன் என அடுத்தடுத்து நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தார் ஆத்மார்த்தி. முகப்புத்தகத்தில் அறிவிப்பை பார்த்துவிட்டு, அமர்வுக்கு எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் வருகைபுரிந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

6.00
மணிக்கு துவங்கிய கூட்டத்தில் முதலாவதாக ஆத்மார்த்தியின் சேராக்காதலில் சேர வந்தவன்சிறுகதைகளை விமர்சித்துப் பேசினார்கள் எஸ்.செந்தில் குமார், ரத்தினக்குமார் உள்ளிட்டோர். வெயில்நதி அறிமுகத்தை நண்பர் கலீல் ஜிப்ரான் செய்துவைத்தார். ஆத்மார்த்தி மற்றும் இயற்கை சிவம் ஆகியோரின் ஏற்புரையோடு அமர்வுகள் இனிதே நிறைவுற்றன.