1.10.15

வெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை



வெள்ளி இழைகளை
விழிகளையுரசும்  நெருக்கத்தில்
காணப்பிடிக்கும்

சேரும் இடைவெளியில்
தம்மை
வலுவற்றவையாய் மாற்றிக்கொண்டு
குழந்தையின்
மென்கரங்களில் மோதி முறியும்
வெள்ளிக் கம்பிகளை அறிவேன்

ரயிலின்
ஜன்னலோர இருக்கையை
வேண்டிப் பெற்று
உச்சியில்
பரந்திருக்கும் வானை
தாங்கி நிற்கும் வெள்ளித் தண்டை
வியந்துகொண்டிருக்கையில்

தாழ மறுக்கும் என் இமைகளுக்கப்பாலும்
திணிப்பதற்கேயொரு திரையிருப்பதை
இருக்கையில்
அடுத்திருந்தவன்தான்
அறியத் தந்தான்

'மழை தெறிக்கிறதே
கண்களை
மூடிக்கொள்ளலாமா?'


(கணையாழி /அக்டோபர்-2015 இதழ் கவிதைகளில்
பரிசுக்குத்தேர்வான கவிதை)

நன்றி: கணையாழி / அக்டோபர்-2015 இதழ்




No comments:

Post a Comment