17.9.13

காலத்தச்சனின் ஒரு கவிதை

கடவுளாதல்

விடுதி அறை எண் 16 ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17 ல் நீங்கள் 
தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.

அந்த நெரிசல் பேருந்தில் 
அந்த பள்ளி சிறுமியிடம் 
அந்த வயோதிகர் 
அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு முன்னமே 
இறங்கிக்கொள்கிறீர்கள்.

பார்க்கப்படாமால் கதறுகிறது 
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல் 
புது மோஸ்தர் அலைபேசியில் 
புதிய நீலப் படங்களை 
சேமிக்கத் தெரியாமல் அல்லாடுகிறீர்கள்.

பெருநோய்  மூட்டை ஒன்று 
ஒன்றே கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய் 
ஒட்டியதாக 
கள்ள லாவகத்துடன் 
நிலம் தேய்த்தபடியே கடந்து செல்கிறீர்கள் .

அண்டைத் தீவில் 
அழுகிய நரகலாய் வாழ்வு 
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத் தாவுகிறீர்கள்.

இதில்  கவலைப்பட 
ஒன்றுமில்லை நண்பர்களே,
நீங்கள் தவணை முறையில் 
கடவுளாகிக்கொண்டிருக்கிறீர்கள் !

- காலத்தச்சன்

No comments:

Post a Comment