21.8.13

ஒன்பது கவிதைகள்





1
மெல்லத் தலைகோதுவதில்
துவங்குவாய்
நிதானமாய்
முள்ளைத் திருகி
ரேடியோவில்
அலைவரிசையைக்
கைப்பற்றுவதைப் போல.

2
அவ்வளவு ஒன்றும்
கசந்ததில்லை
பசுமையை அரித்து
பின்
புழுக்கள் மிச்சம் வைக்கும்
வெறுமையைக் காட்டிலும்
அந்த
வேப்ப மரத்தின் இலைகள்.

3
இடர் வருமென்றஞ்சி
உடைந்து சிதறிய
சர்க்கரை அடைத்த ஜாடியை
ஒரு சில்லும் விடாமல்
சேகரித்துப் பதுக்கியாயிற்று

ஒன்றைக் கொல்லலாம்
எறும்பை
ஒரு நூறை என் செய்ய?

4
மெர்குரி வெளிச்சத்தை
கடக்கிற சமயம்
சிறு விசும்பலோடு
விட்டு விலக
யத்தனிக்கிறது என் நிழல்
சவ்வுபோலத் தன்னை
இழுத்தும் பார்க்கிறது

நிழல் என்னைவிட்டு விலகுவதுமில்லை
நான் கைவிடுவதுமில்லை.

5
உன்
கண்ணின் விளிம்பைக்
கடந்துவிட்ட கண்ணாடித்தாரை
சிதறும் சில்லுச்சில்லாய்
என்னில் தைக்க.

6
அழுந்த முத்தமிட்டு
திளைத்து விலகுகிறது
பட்டாம்பூச்சி
காற்றில் இதழ்களை
துடைத்துக் கொள்கிறது
அந்தப் பூ.

7
கற்கண்டை நினைவூட்டும்
இறைந்து கிடக்கும்
வாகனத்தின் கண்ணாடிச்
சில்லுகளும்

கசப்பாய்க் கசக்கும்
ஆனாலும்.

8
அரிந்து
எலுமிச்சையை
அரைக் கோளமாக்கிப்
பிழிந்தேன்
இப்படியாக
என், உங்களின்
நாவின் உமிழ்நீரை.

9
உன் வெறும் மூச்சை
இலையென
வாங்கிச் செழிக்கும்
என் தாபம்
அனல் மூச்சில்
சுடராகி நெளிகிறது
இருப்பு கொள்ளாமல்.


No comments:

Post a Comment