22.12.14

நான்கு கவிதைகள்



1)
நுழைந்தது தவிர
வெளியேறுவதற்கென்று
கதவைக் கொண்டிராத
புறத்தேயும்
இருளண்டிய வீடு

பற்றியெரியும் அறையொன்றிலிருந்தெழும்
கூக்குரலை உள்ளுணர்ந்து
நோக்குகையில்
எதிர்ப்படும்
முகமற்ற முகம்

கம்பிகளற்ற ஜன்னலுக்குள்
ஒடுங்கும்
மருளும் ஜோடி விழிகள்


2)
யாருக்கும்தான் அது
வர்த்திச் சுருள்

நானதை
முள்ளொன்றுக்கே
கிரீடம் வைத்தேன்

வட்டப்பாதையில்
கனன்று கனன்று
இந்த இசைத்தட்டு கசியும்
பாடலில்லையேல்

கொசுக்கள் பாய்ச்சும்
முள் கரண்டிகளுக்கு அலறி
கெடுத்திருப்பேன்
எவரது உறக்கத்தையும்


3)
தீண்டலுக்கு ஆட்பட்ட
உணர்கொம்புகள் இயக்க
கூட்டிலிருந்து வெளிவரும்
நம் நத்தைகள்


4)
வருடித் திளைக்க
வாய்க்காதபடி
மலைகள் மீது தவழ்ந்திருக்கும்
ஓர் மேகம்

என்
ஐந்து கதிரிடமும்
கேட்டுக்கொண்டேன்

பாலாடையைக்
களைவதுபோல் இருக்கட்டும்


No comments:

Post a Comment