23.12.14

எனதன்பு தியாகு - சுந்தர்ஜி

 எனது முதல் கவிதை நூல் ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருது அறிவிக்கப்பட்டதறிந்து எனது பிரியத்துக்குரிய ஆசான் திரு சுந்தர்ஜி அவர்கள் எழுதியது. குறிப்பாக சுந்தர்ஜியிடமிருந்து வரும் அபிப்பிராயங்களே முக்கிய விருதென நினைக்கும் என்னை கீழ்காணும் வரிகள் இப்பவும் பரவசத்தில் வைக்கின்றன. இந்த கடிதத்தை பத்திரப்படுத்த இன்றைக்குத்தான் தோன்றியது  சற்றே  வருத்தம் தருகிறது என்றாலும், இதை செய்துவிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. நன்றி ஜி..!

*******
னதன்பு தியாகு,

உங்கள் நூல் ”எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை”க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருதைப் பெற்றிருப்பதான செய்தியை மிகத் தாமதமாக அறிகிறேன். விருதுகளோடு படைப்பாற்றலை நான் ஒருகாலத்திலும் பொருத்திப் பார்ப்பவன் இல்லை என்ற போதும், மிகச் சரியான பருவத்தில், மிகவும் தகுதியான படைப்புகளுக்கு மிக அபூர்வமாகவே கௌரவமும், அங்கீகாரமும் வாய்த்திருக்கின்றன.

உங்கள் தொடர்பு வாய்த்த நாட்களில் இருந்தே பார்க்கும் கோணங்களாலும், எழுதும் மொழியாலும் புதுத் தடம் அமைத்ததை நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதையிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். உருவாக்கும் பிரயத்தனத்தை உடைத்து, பாசாங்கில்லாத சொற்களால் கவிதையை மெருகூட்டும் உங்கள் படைப்பாற்றலுக்கும், உங்கள் பணிவுக்கும், மேன்மைக்கும் தகுதியானது இந்த விருது.

புத்துணர்வால் மலர்த்தும் செறிவான உங்கள் கவிதைகள் பயணிக்கும் பாதையில் நானும் உடன் வந்து கொண்டிருப்பேன். நிறைவான உடல்நலத்தையும், மனநலத்தையும், நல்ல சூழலையும் இறைவன் உங்களுக்கு அருளட்டும்.
  
- சுந்தர்ஜி ப்ரகாஷ்
   13.10.2014

No comments:

Post a Comment