2.11.11

நிறமில்லாத இரத்தம்

முன்னதாக :

அரிமா...முருகேசன் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு, கோவையிலிருந்து வெளிவரும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு மாத இதழ் அகிலம். (தொடர்புக்கு: பேசி: 9842291116 ; தொடர்புடைய படைப்புக்களை அனுப்பி வைக்க, மின்னஞ்சல்
முகவரி: editor@agilam.org)

நீர் நிலைகளை, காடுகள் மற்றும் விளை நிலங்களை பாதுகாத்தல், இயற்கையோடு இணைந்த உணவு, மருத்துவ முறைகளை ஏற்றல் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கென தொடங்கப்பட்டிருக்கும் இந்த இதழ், இதே நோக்கத்தோடே வெளிவந்துகொண்டிருக்கும் ஏனைய இதழ்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாயும் தரமாயுமிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட, வாசக மனத்தில் வினையாற்றக்கூடிய கட்டுரைகள், (பிரச்சார) கவிதைகள் மற்றும் தன்னம்பிக்கை தொடர்கள், பகத்சிங், திப்புசுல்தான் போன்றோரின் வரலாற்றுத் தொடர்கள், இன்னபிற சிறந்த பகுதிகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அகிலம் இதழில் - குறிப்பாக - இக்கவிதை அச்சேறியிருப்பதில் மகிழ்கிறேன்.
 


இன்றோடு
அறுந்து தரை வீழ்கிறது
உன் தாய்மையின் தலை

இன்றுதான்
சிதறியுடைந்து பாழாகிப்போனது
கிளைகள் நீட்டி
இலைகளை வேய்ந்து
நீ கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு

நேற்றுவரை
புழு பூச்சி பறவைகளின்
பிரசவம் நிகழ்ந்த
இலவச மகப்பேறு மருத்துவமனையாயிருந்தது
உன் மனை

பிராணிகளின் பிராண வாயு
சுதந்திரம் என்பதால்
அவை
தாவி ஓடி விளையாடும்
தடகளப்போட்டி மைதானமாயிருந்தன
உன் தோள்கள்

சுவற்றில் சிறு கீறல் விழுந்தாலே
அலறும்
வீட்டு உரிமையாளர்கள் மத்தியில்
வாடகையேதும் வாங்காமல்
குருவிகளையும் காக்கைகளையும்
குடிவைத்தவள் நீ

உன் தேகமெங்கும்
நாங்கள்
ஆணிகளால் அறைந்தோம்
கூரான ஆயுதம் கொண்டு
காதலரின் பெயர்கள் வரைந்தோம்

ரணமானதே மேனியென்று
ரௌத்திரம் கொள்ளாமல்
கனமான உன் சோகங்களை
எங்களுக்கு
காட்டாமல் மறைத்த
கண்ணியக்காரி நீ

நாங்கள்
உழைத்துக்களைத்து
உன் மடி தேடி வந்தால்
வெயிலை வடித்துவிட்டு
நிழல் தேனீர் தந்தாய்

பசி பொறுக்காமல் உன்
புகலிடம் தேடி வந்தாலோ
உயிரைக்கனியாக்கி
உண்ணக்கொடுத்தாய்

இறுதியாய்,

நீ மரித்து வீழ்ந்த பின்புதான்
மிச்சமான உன் எலும்புகள்
எங்கள் வீட்டின்
மேஜை நாற்காலிகளாயின

மனிதர்கள் எங்களை நீ
மன்னித்துவிடு

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
என்று சூளுரைத்தோம்
பின்பு
எங்கள் பேருந்துகள் பயணிக்க
சாலைகளில்
நாங்களே
உன்னை வேரோடு அறுத்தோம்

ஆம்..

ஈன்ற அன்னையருக்கே
முதியோர் இல்லத்தில்
கல்லறை தயாரிக்கும் நாங்கள்
அறியவில்லை

வாள் கொண்டு கிழித்தபோது
வழிந்த
நிறமே இல்லாத உன் ரத்தம் பற்றி

காற்று மொத்தமும் நிறையும்படி
பெருங்குரலெடுத்து அழுத
உன்
சத்தம் பற்றி..


- 'அகிலம்' - செப்டம்பர் இதழில்

1 comment:

  1. ஆஹா.. கையைக் கொடுங்கள்..
    முழுமையான ரசனை.. வலி.. வார்த்தைகள் தொகுத்த விதத்தில் கம்பீரம்.. அருமை.. அருமை..

    ReplyDelete