31.5.13

மழை



1)
தூறல் கணங்களில்
நீர்த்தூவி - மழை,

சிலிர்க்கச் சிலிர்க்க

எதிர்கொள்ளும்

சிறு செடி அவள்.


2)
கூரைச் சரிவில்
வழியும் மழை பிடிக்க

உள்ளங்கை விரிக்கிறாள்

அகப்படுவது போல் இறங்கி

பின்னும்
குதித்து தப்பிக்கும்

கொஞ்சம் மழை.


3)
விரைந்து சார்த்திய
சன்னலின்

கண்ணாடியினூடே காண்கிறேன்

மழை

மோதி

கண்ணீராகிச் சரிவதை.


4)
குடைபிடித்து வருகிறாய்
மழை சூழ,

நீதான்

குளிரூட்டப்பட்ட கூண்டுக்

கிளி.


5)
ஜனுவின் கண்ணின்
வெண்திரை வானம்

விழி கார்மேகம்,

மின்னி இறங்கும் மழை,

இடியென்றாகும் என்

அதட்டலைத் தொடர்ந்து.


6)
மூர்க்கமாய் மோதி
தேகம் நோக

பொழியும் திட மழை,

தன்னோடு கரைக்கும்

மெல்ல

அந்நேரத்தின்

என் சினத்தை.


7)
தூறலிடுவதில் துவங்குகிறது
தன் தழுவலை

மழை

புள்ளிப் புள்ளியாய்

சிவந்து

நாணுகிறது நிலம்.

 

2 comments:

  1. மழை பொழிந்து நனைத்து விட்டுப் போகிறது இதயத்தை.

    ReplyDelete